அரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - தல வரலாறு - பாடல் பெற்ற தலம் இல்லை

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

தல வரலாறு:

அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர்.  மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந்திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்.

மதுரையைச் சுற்றி பாண்டியர் காலத்தில் நிறைய குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, கழுகுமலை வெட்டுவான்கோயில் எல்லாம் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை என்றே நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான சான்றுகளை இவ்வூர் கொண்டுள்ளது. இங்குள்ள பாண்டியர்கால குடைவரைக் கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலையைக் குடைந்து மிகப்பெரிய சிவலிங்கம், வாயிலில் துவாரபாலகர்கள், குடைவரையின் வெளிமுகப்பில் பெரியபிள்ளையார், இலகுலீசர் சிலையும் உள்ளது. மிகவும் அரிதான சிவனின் இலகுலீசர் சிற்பம் இங்கு காணப்படுகிறது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள மலையிலிருந்து கொண்டு வரும் சுனைநீரிலிருந்துதான் சிவனைக் குளிப்பாட்டுகிறார்கள். எனவே இந்தச் சுனை நீரை இக்கோயில் தீர்த்தச்சுனைநீர் எனலாம். குடைவரைக்கு அருகே ஒரு சிறுகுகை ஒன்று உள்ளது. ஒருவர் மட்டும் உள்ளே படுக்கலாம். உள்ளே படுத்துப் பார்த்தால் மிகவும் குளுமையாக இருந்தது. அதன் அருகே பெண்தெய்வம் சிறு மண்டபத்திலுள்ளது. இந்த ஊர் மக்கள் இவ்விடத்தை இடைச்சிமண்டபம் என்கின்றனர்.

இக்குடைவரையைப் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட்டவில்லையெனினும், இக்குடைவரைக்கோயிலின் அமைப்பைக் கொண்டு இது  கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் குடைவித்த கோயில்தான் என்பதை தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.  தெளிவான கல்வெட்டுக்கள் இல்லாத போதிலும், இக்கோயிலின் முன்புறத்தில்  முற்கால தமிழ் எழுத்துக்களின் சில வரிகள் எழுதப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது.

இந்தக் கோயிலின் சிறப்பு இங்கிருக்கும் லகுலீசர் சிற்பம். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில்  பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.

லகுலீசர் கி.பி.2ம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பவுத்தமும், சமணமும் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. லகுலீசர் உருவாக்கிய சைவ சமத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது. சிவபெருமானே லகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. லகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது. நாகைக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம், கச்சிக் காரோஹணம் ஆகிய மூன்றுமே அவை. இறைவனே இறங்கி மானுட வடிவில் வந்து அவதரிப்பதையே காரோஹணம், அதாவது காயமாகிய உடல் கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது.

தமிழகத்தில் சிவலிங்க வழிபாடு பக்தி இயக்கக் காலத்தில் கோயில்களில் விரிவடைந்தமைக்கு பாசுபத கொள்கை அடிப்படையாக அமைந்தது. சைவத்தை அரசியல் மதமாக ஏற்ற பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் சிவ வழிபாட்டினை விரிவாக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிர்மானித்தார்கள். பெரிய கற்கோயில்கள் தொடங்கப்பட்ட காலமாகிய கி.பி 8ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திற்கு முன்னர் குடைவரைக்கோயில்களில் சைவசமயத்தின் குறியீடாகிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்த இடங்களாக அமைந்தன. தமிழக வரலாற்றில் சைவ சமய வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடைவரைக் கோயிலாக இந்த அரிட்டாபட்டி குடைவரைக் கோயில் திகழ்கின்றது.



போன்:

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர்.


இந்தக் கோயிலின் சிறப்பு இங்கிருக்கும் லகுலீசர் சிற்பம். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில் பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.