மனத்துணைநாதர் கோயில் திருவலிவலம் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர் : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
தல மரம் : புன்னை.
தீர்த்தம் : சங்கர தீர்த்தம்.
வழிபட்டோர் : சூரியன், கரிக்குருவி(வலியன்), காரணமாமுனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஒல்லையாறி உள்ளமொன்றிக், 2. பூவியல் புரிகுழல் வரிசிலை.
2. அப்பர் - நல்லான்காண் நான்மறைக.
3. சுந்தரர் - ஊனங் கைத்துயிர்ப் பாயுல.


தல வரலாறு:

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. அதன் பின் உள்ள 3 நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுள்ள கட்டுமலை அமைந்துள்ளது. படிகளேறி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது.மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் "பொழில் சூழ்ந்த வலிவலம்" என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரயைக்கப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும் என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முனபு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு. அதன்படி கணபதிவர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். சுந்தரர் தனது பதிகத்தில் 5-வது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.



சிறப்புக்கள் :

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

இவ்விறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் 'வலிவலமும்மணிக்கோவை' என்னும் நூலொன்று, "தமிழ்தாத்தா" திரு. உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் வெளிடப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சோழர் காலத்திய ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.


போன்: +91- 4366 - 205 636

அமைவிடம் மாநிலம் :

திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள்

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.

தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும் என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும்.