திருவுசாத்தானம் என்ற கோயிலூர் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : மந்திரபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம் : மா.
தீர்த்தம் : அநுமன் தீர்த்தம், மாக்கண்டேய தீர்த்தம், கௌதம தீர்த்தம்.
வழிபட்டோர் : இந்திரன், வருணன், விசுவாமித்திரர், இராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நீரிடைத் துயின்றவன் தம்பிநீள்.


தல வரலாறு:

தற்போது மக்கள் "கோயிலூர்" என்றழைக்கின்றனர். கோயிலூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதாலும், இவ்வூர் முத்துபேட்டைக்கு அருகில் இருப்பதாலும் வழக்கில் இத்தலம் "முத்துப்பேட்டை - கோயிலூர்" என்று வழங்கப்படுகின்றனர். கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இவ்வாலயம் ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு எதிரே ஆலயத்தின் திருக்குளம் உள்ளது. குளக்கரையில் விநாயகர் சந்நிதி உள்ளது. இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் உட்புறத்தில் இடதுபுறம் சிறிய தீர்த்தமும், வலதுபுறத்தில் அம்பாள் கோயிலும் அமைந்துள்ளது. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் நந்தி ஆகியவற்றையும் இந்த வெளிப் பிரகாரத்தில் காணலாம். இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளையுடையது. துவார கணபதி, சுப்பிரமணியரைத் தொழுது, உள்புகும்போது வாயிலில் இடதுபுறம் அதிகார நந்தி காட்சி தருகிறார். உட்பிரகாரம் வலம் வரும்போது சூரியன், தலப்பதிகக் கல்வெட்டுக்கள், அறுபத்துமூவர், (நேர் எதிரில் கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று கால்களுடனும் காட்சி தருகிறார் - அழகான உருவம், தரிசிக்கத்தக்கது) கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், ராகு - கேது, சப்த மாதர்கள், வீரபத்திரர், காளி, காசிவிசுவநாதர், சூதவன விநாயகர், சோமாஸ்கந்தர், வருணன் அவர் வழிபட்ட லிங்கம், இராமர் அவர் வழிபட்ட லிங்கம், மார்க்கண்டேயர் அவர் வழிபட்ட லிங்கம், அன்னபூரணி, சுப்பிரமணியர், வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி நவகன்னியர், சனிபகவான், நடராஜ சபை, பைரவர், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. உட்பிரகாரத்தை அடுத்துள்ள முன்மண்டபத்தில் தல வரலாறு வண்ண ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். கருவறை வாயிலின் இருபுறங்களிலும் சங்கநிதி, பதுமநிதி மூர்த்தங்கள் உள்ளன.

நேரே மூலவர் மந்திரபுரீசுவரர் சதுரபீடத்தில் சுயம்பு லிங்க வடிவில் இடதுபுறம் சற்றே சாய்ந்த நிலையில் குனிந்து ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கருட பகவான் வானவெளியில் அமுத கலசத்தை ஏந்திச் செல்லும்போது சிந்திய அமுதம் இறைவன் மீது பட்டதால் இறைவன் வெண்மை நிறமாக காட்சி அளிக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்திரன், விசுவாமித்திரர், இராமர், இலட்சுமனன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டுள்ளனர். விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம். இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு, எனவே இறைவன் திருப்பெயர் மந்திரிபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்து) காரணத்தால் இத்தலம் உசாத்தானம் என்று பெயர் பெற்றது. இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், ஜாம்பவான் ஒடை, அநுமான் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்கு நல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன. இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது. சூதவனம் என்றால் மாங்காடு. இதற்கேற்ப தலவிநாயகர் சூதவன விநாயகர் என்ற பெயருடன் மாவிலையைக் கரத்தில் ஏந்தியபடி காட்சி தருகிறார். இவ்வாலயத்தின் தலமரமாக மாமரமும், தீர்த்தங்களாக அநும தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், நெல்லி தீர்த்தம், குஞ்சித தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம் ஆகியவையும் விளங்குகின்றன.

சிறப்புக்கள் :

விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம். கோயிலின் உள் வலத்தில் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று திருவடிகளுடனும் காட்சித் தருகிறார்- அழகான உருவம் தரிசிக்கத் தக்கது.

கோயிலில் வருணன், இராமர், மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

முன்மண்டபத்தில் தல வரலாறு வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

மூலவர் - சுயம்பு மூர்த்தி; வெண்ணிறமாக காட்சித் தருகிறார்.

விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

கல்வெட்டுக்களில் சுவாமியும் அம்பாளும் 'திருவுசாத்தானமுடைய நாயனார், பெரிய நாச்சியார் ' என்னும் திருநாமங்களால் குறிக்கப்படுகின்றனர். இறையிலியாக நிலங்களும், தோப்புக்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகின்றன. தலபுராணம் - சூதவனப் புராணம் உள்ளது.

1081 ஏக்கர் நன்செய், 1018 ஏக்கர் புன்செய் நிலங்களும் - தென்னந்தோப்புக்களும், 36 கபடிடஸ்களும், 229 மனைக்கட்டுக்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன. (இக்கோயில் நிர்வாகத்தில் முத்துப்பேட்டையில் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெறுகிறது.) - (ஆதாரம் - தலவரலாறு.)


போன்:  +91- 4369 - 262 014, 99420 39494

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் 1 கி.மி. தொலைவில் சாலையிலேயே கோயிலின் வளைவு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் தேவஸ்தானம் என்று உள்ளது. அதனுள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம். முத்துபேட்டையிலிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு. தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


அமுதம் இறைவன் மீது பட்டதால் இறைவன் வெண்மை நிறமாக காட்சி அளிக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தி.
விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம்.